×

‘’சிக்கன் 65ல் 4 பீஸ்தான் உள்ளது’’ மீதி பீஸ் எங்கே என்று கேட்டு கடைக்காரருக்கு சரமாரி அடி: வியாசர்பாடி ரவுடி கைது

பெரம்பூர்: சிக்கன் பீஸ் பிரச்னையில் கடைக்காரரை சரமாரியாக தாக்கிய ரவுடியை கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் ஆதிவாசி காலனி ஓம் சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் திவாவின் உசேன் (54). இவர் வியாசர்பாடி கல்லுக்கடை சந்திப்பு பகுதியில் சிக்கன் கடையுடன் சிக்கன் 65 பொறிக்கும் கடை வைத்துள்ளார். இங்கு நேற்றிரவு 3 பேர் குடிபோதையில் வந்து சிக்கன் 65 ஆர்டர் கொடுத்துள்ளனர். இதன்பின்னர் உரிமையாளரிடம் சிக்கன் 65 எவ்வளவு ரூபாய் என்று கேட்டபோது 70 ரூபாய் என தெரிவித்து உள்ளார். அதற்கு 3 பேரும், ‘’எங்களிடம் 50 ரூபாய்தான் உள்ளது. மீதி 20 ரூபாயை பிறகு தருகிறோம். இப்ப சிக்கன் 65 தாருங்கள்’’ என கேட்டுள்ளனர்.
இதையடுத்து உரிமையாளர் உசேன், 4 கறி துண்டுகளை எடுத்து கடாயில் போட்டு வறுத்துள்ளார்.

இதனால் அவர்கள், ‘’சிக்கன் 65 என்றால் ஐந்து பீஸ்தான் வரவேண்டும். நீங்கள் 4 பீஸ்தான் போடுகிறீர்கள்’’ என கூறி கடும் வாக்குவாதம் செய்ததுடன் ஒரு சிக்கன் பீஸை எடுத்து கடாயில் போட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அங்கு இருந்த கரண்டியை எடுத்து உசேன் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு 3 பேரும் ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த உசேனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, வியாசர்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில், கடை உரிமையாளர் உசேனை தாக்கியதாக வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 1வது தெருவை சேர்ந்த வேங்கையன் (23) கைது செய்தனர். இவர் மீது 7 குற்ற வழக்குகள் உள்ளது. வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ‘’சிக்கன் 65ல் 4 பீஸ்தான் உள்ளது’’ மீதி பீஸ் எங்கே என்று கேட்டு கடைக்காரருக்கு சரமாரி அடி: வியாசர்பாடி ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi ,Perambur ,Usain ,Om Shakti Vinayakar Koil Street, Kodunkaiyur Adivasi Colony, Chennai ,Vyasarpadi Kallukkadai Junction ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மது விற்ற பார் ஊழியர்கள் 3 பேர் கைது