×

நிதிஷ்குமாரை தொடர்ந்து அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசுக்கு நெருக்கடியா?

புதுடெல்லி: நிதிஷ்குமாரை தொடர்ந்து அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். தங்களது மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜ கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், தங்களது மாநிலங்களுக்கு அதிக நிதி பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சந்திரபாபு நாயுடு கடந்த 15 நாட்களுக்கு முன்பு 2 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமரிடம், ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் 7 அம்ச வளர்ச்சி குறித்த பட்டியலை வழங்கினார்.

இந்த சந்திப்பு நடந்த 5 நாட்களில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட் கூட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவின் பேரில் அவரது கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று முன்தினம் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து நேற்று 2வது முறையாக சந்திரபாபு நாயுடு டெல்லி சென்றார்.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது வர இருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இன்று காலையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற இருந்தது. பின்னர் திடீரென ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திரா திரும்பினார். ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் முன்பே சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் போட்டி போட்டு கொண்டு தங்களது மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டணி தந்திரத்தை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிதிஷ்குமாரை தொடர்ந்து அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றிய அரசுக்கு நெருக்கடியா? appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Amitshah ,Nitish Kumar ,EU ,New Delhi ,Amitsha ,Delhi ,Bihar ,Andhra ,Dinakaran ,
× RELATED விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளை 2-வது...