×

ஆடி மாதம் தொடக்கம் ஜவுளி வாங்க குவிந்த மக்கள்: வியாபாரிகள் மகிழ்ச்சி

 

ஈரோடு, ஜூலை 17: ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஜவுளி ரகங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் போன்ற பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை வரை நடைபெறும். இந்த சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பண்டிகை சீசன் இல்லாததால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகள் வராததால், மொத்த விற்பனை சரிவடைந்தது. கடந்த வாரம் முதல் ஜவுளி சந்தை வியாபாரிகள் ஆடி மாத விற்பனைக்காக ஜவுளி ரகங்களை விற்பனைக்கு குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வாரம் கூடிய சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

வெளிமாநில வியாபாரிகள் குறைந்தளவு வந்திருந்ததாலும், வெளிமாவட்ட வியாபாரிகள் மற்றும் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஜவுளி சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான வேட்டி, சர்ட், துண்டு, லுங்கி, சுடிதார் ரகங்கள், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள், உள்ளாடைகளை தேர்வு செய்து மொத்த விலையில் வாங்கி சென்றனர். இதனால், இந்த வாரம் சில்லரை விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆடி மாதம் தொடக்கம் ஜவுளி வாங்க குவிந்த மக்கள்: வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Adi ,Erode ,Erode Textile Market ,Panneerselvam Park ,Iswaran Kovil Road ,Thiruvenkatasamy Road ,Old Central Theater ,
× RELATED கொள்ளிடம் அருகே குமிளங்காடு சுயம்பு...