×

கஞ்சா வியாபாரிகளுக்குள் மோதல் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு போலீஸ் வலை

திருப்போரூர்: சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (24). இவர், தனியார் உணவு சப்ளை நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டே, கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கஞ்சா விற்பனை தொடர்பாக இவருக்கும், ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த தினேஷ் (24) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சூர்யா உணவு சப்ளை செய்வதற்காக ஏகாட்டூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, சரவணன் என்பவர் 3 கஞ்சா பொட்டலங்களை, சூர்யாவிடம் கொடுத்து தினேஷ் என்பவர் வந்து பெற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார். இதனால், சூர்யா ஏகாட்டூர் தனியார் மால் அருகே அவர்களுக்காக காத்து கொண்டிருந்தபோது, 3 பேர் பைக்கில் வந்தனர். அவர்களில் சூர்யாவுக்கு ஏற்கனவே கஞ்சா விற்பனையில் முன்விரோதம் இருக்கும் தினேசும் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சூர்யா, உனக்குத்தான் கஞ்சா சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் கொண்டு வந்திருக்க மாட்டேன் என்று கோபமாக கூறியுள்ளார்.

இதனால், கோபமடைந்த தினேசும், அவருடன் வந்த இருவரும் சேர்ந்து சரமாரியாக சூர்யாவை தாக்கினர். மேலும், தினேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சூர்யாவின் தலை, வலது கை போன்ற இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த தினேஷ் ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தகவலறிந்த, கேளம்பாக்கம் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் இருந்து திரும்பிய சூர்யாவிடம் விசாரணை நடத்தி, அவரை தாக்கிய தினேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

The post கஞ்சா வியாபாரிகளுக்குள் மோதல் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Surya ,Semmancheri ,Choshinganallur ,Dinesh ,Jalladianpet ,
× RELATED தஞ்சையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல்...