×

கோவளத்தில் வடமாநில வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

திருப்போரூர்: கோவளத்தில் வடமாநில வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச்சென்ற 5 பேர் கொண்ட கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை, கோவளத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திசம்பர் (45) என்பவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றுவிட்டு ரயில் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை சென்னைக்கு திரும்பிய இவர், கோவளம் சந்திப்பில் இறங்கி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.  அப்போது, 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், திசம்பரை மடக்கி செல்போன், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர், தரமறுத்து கூச்சல் போட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள், திசம்பரின் கைகள் மற்றும் தலையில் வெட்டிவிட்டு, அவரிடமிருந்து செல்போன், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.

இதில், பலத்த காயமடைந்து மயங்கி கிடந்த திசம்பரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கோவளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநில வாலிபரிடம் செல் போன், பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோவளத்தில் வடமாநில வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : North State ,Kovalam ,Tirupporur ,East Coast Road, Kovalam ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் கைது