×

துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் பலியான சம்பவம்: 30 ராணுவ வீரர்களுக்கு எதிராக நாகாலாந்து அரசு வழக்கு

புதுடெல்லி: துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் பலியான சம்பவம் தொடர்பாக 30 ராணுவ வீரர்களுக்கு எதிராக நாகாலாந்து அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சென்ற கார் மீது பாதுகாப்பு பணியில் இரந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘காரில் சென்ற அனைவரும் தங்களது கையில் துப்பாக்கி ஏந்தி இருந்தனர். கருப்பு உடை அணிந்திருந்தனர். எங்களைக் கண்டவுடன் வேகமாக காரில் இருந்து குதித்து ஓடினர். அதனால் துப்பாக்கி சூடு நடந்தது’ என்று கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள கிராம மக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் 7 பேரும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு, ராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணையை தொடங்கியது. சிறப்பு புலனாய்வு குழுவால் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டன. இதற்கிடையே ராணுவ வீரர்களின் மனைவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெறாமல் எங்களது கணவர்கள் மீது மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த எப்.ஐ.ஆர்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது. அதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ராணுவ வீரர்கள் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இவ்விவகாரம் ெதாடர்பாக ஒன்றிய அரசிடம் நாகாலாந்து அரசு ஒப்புதல் பெற முயன்றது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நாகாலாந்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘30 ராணுவ வீரர்கள் மீது வழக்குத் தொடர ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

ஒன்றிய அரசின் சார்பில் வழக்கை விசாரிக்க வந்த குழு, சிறப்புப் புலனாய்வுக் குழு (மாநிலக் காவல்துறை) சேகரித்த சாட்சியங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அவர்கள் விசாரணையை முறையாக நடத்தவில்லை. தன்னிச்சையாக அறிக்கையை தயாரித்து, 30 ராணுவ வீரர்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டது. எனவே ராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எங்களிடம் முக்கிய ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, இறந்த 13 பொதுமக்களுக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

The post துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் பலியான சம்பவம்: 30 ராணுவ வீரர்களுக்கு எதிராக நாகாலாந்து அரசு வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nagaland govt ,New Delhi ,Nagaland government ,northeastern ,Nagaland ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...