×

சேலம் அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி குத்திக்கொலை

*கணவன் வெறிச்செயல்; பரபரப்பு வாக்குமூலம்

சேலம் : சேலத்தை அடுத்துள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்துமதியின் தாய் செல்வி, தனது மகள் இந்துமதிக்கு ராம்நகர் காளியம்மன்கோயில் தெருவில் உள்ள ஒரு ஓட்டு வீட்டை கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சுரேஷ்-இந்துமதி தம்பதியினர் வசித்தனர். இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளான்.

கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதில், மனைவி இந்துமதி வேறு இடங்களுக்கும் தனியாக கட்டிட வேலைக்கு செல்வதாக கூறப்படுகிறது. அப்போது சிலருடன் பேசி பழகுவதாக சந்தேகப்பட்டு, சுரேஷ் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வரும் சுரேஷ், மனைவி இந்துமதியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட தகராறில், மனைவி மற்றும் மகனை விட்டு விட்டு சுரேஷ் தனியாக சுக்கம்பட்டிக்கு சென்றுவிட்டார். கடந்த 4 நாட்களுக்கு முன் மீண்டும் ராம்நகரில் உள்ள வீட்டிற்கு சுரேஷ் வந்துள்ளார். வந்தநாள் முதல் மீண்டும் குடித்துவிட்டு வந்து மனைவி இந்துமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் வந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் மீண்டும் இந்துமதியிடம் சுரேஷ் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். அப்போது திடீரென கத்தியால் அவரது வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதனால், ரத்த வெள்ளத்தில் இந்துமதி சரிந்து விழுந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஓடிவந்து இந்துமதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இந்துமதி உயிரிழந்தார்.

இக்கொலை பற்றி தகவல் அறிந்த காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். கொலையில் ஈடுபட்ட சுரேசை மடக்கிப் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். உதவி கமிஷனர் செல்வம், சம்பவ இடத்தில் விசாரித்தார். பிறகு அரசு மருத்துவமனையில் இருந்த இந்துமதியின் உடலை பிரேதப்பரிசோதனை கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கைதான சுரேசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீசார் கூறுகையில்,‘‘திருமணமான நாள் முதல் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரிலேயே சுரேஷ், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இருவரும் கட்டிட வேலைக்கு செல்லும் நிலையில், வேறு ஆண்களுடன் பேசுவதை பார்த்து, நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 6 மாதமாக பிரிந்து சென்றநிலையில், கடந்த வாரத்தில்தான் மீண்டும் வந்து சேர்ந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து, தனியாக சென்று தூங்கியுள்ளார். இதனால், வேறு நபரோடு நீ தொடர்பு வைத்திருப்பதை பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க வேண்டுமா எனக்கேட்டு திட்டியுள்ளார். பிறகு காலையில் எழுந்தவுடன் மனைவி இந்துமதியிடம் மீண்டும் தகராறு செய்து, கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான சுரேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்கொலை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் அருகே பயங்கரம் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Suresh ,Sukkampatti ,Indumati ,Ramnagar, Ayodhyapatnam ,
× RELATED சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில்...