×

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி அவரது தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை தொடங்காததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதற்கிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு செந்தில்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Enforcement Directorate ,First Session Court ,Chennai ,Chennai Principal Sessions Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...