×

போதையில் மகளை கணவன் கொன்றதால் மனைவி, மற்றொரு மகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை

கோவை: போதையில் மகளை கணவர் தாக்கி தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொலை செய்ததால், மனைவி இன்னொரு மகளுடன் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா (36). வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது மகள்கள் ஹரினி (9), ஷிவானி (3). தங்கராஜ் மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்து அவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரத்தில் மகள் ஹரினியை அடித்து, 8 அடி ஆழ நீர் நிரம்பிய தரைமட்ட தொட்டியில் வீசினார். இதில் நீரில் மூழ்கி ஹரினி இறந்தார். இதை பார்த்து ஆவேசமடைந்த புஷ்பா, மற்றொரு மகள் ஷிவானியுடன் தொட்டியில் குதித்து விட்டதாக தெரிகிறது. அதை கண்டுகொள்ளாமல் போதையில் தங்கராஜ் வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கிவிட்டார். நேற்று காலை தங்கராஜ் எழுந்து, மனைவி, மகள்கள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார். தகவலறிந்து சிங்காநல்லூர் போலீசார் வந்து தங்கராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர், மகளை தொட்டியில் வீசி கொன்றதும், மனைவி மற்றொரு மகளுடன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து தங்கராஜை கைது செய்தனர். இதுகுறித்து புஷ்பாவின் தந்தை முனியப்பன் (60) கூறுகையில், ‘‘என் மகள் திருமணம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் தங்கராஜ் சைகோபோல் நடப்பதாகவும், கொடூரமாக தாக்குவதாகவும் எனக்கு போன் செய்து கூறினார். நான் 2 நாளில் அவரை என் வீட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. தங்கராஜ்தான் 3 பேரையும் அடித்து கொலை செய்து நீர் தொட்டியில் போட்டுவிட்டார். இதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்’’ என்றார். தங்கராஜ் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து டார்ச்சர் தாங்காமல் அவர் பிரிந்து சென்றதால், புஷ்பாவை 2 வது திருமணம் செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

The post போதையில் மகளை கணவன் கொன்றதால் மனைவி, மற்றொரு மகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : KOWAI ,Thangaraj ,Kowai Ondiputur Weaver Colony ,Pashba ,
× RELATED கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு...