×

முதன்மை சுற்றுலாதலமாக முன்னேறியுள்ள தமிழகம்: அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

சென்னை: சென்னை, சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டில் கிராமியச் சுற்றுலா மற்றும் வான்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ.50லட்சம் செலவில் தயாரிக்கப்படும். ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் பிற முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல்களை தரம் உயர்த்தும் பணிகள் ரூ.18.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாடு சுற்றுலாப் பயணச்சந்தை ரூ.1 கோடி செலவில் சென்னையில் நடத்தப்படும் என மொத்தம் 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

The post முதன்மை சுற்றுலாதலமாக முன்னேறியுள்ள தமிழகம்: அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ramachandran ,Chennai ,Tourism Complex Forum ,Tourism Minister ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...