×

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல்

மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கடத்தல் ஆசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து ஒரு விமானம், சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளில், சந்தேக நபர்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சுற்றுலா பயணியாக வந்த தமிழகத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் மடக்கி நிறுத்தி விசாரித்ததில், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் இல்லை எனக் கூறி, வெளியேற முயன்றுள்ளார். பின்னர் கன்வேயர் பெல்ட்டில் வந்த 2 பெரிய அட்டை பெட்டிகளை எடுத்துள்ளார். இதனால், அந்த நபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே, அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த 2 பெரிய அட்டை பெட்டிகளில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு அவர், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை, சாக்லேட், பிஸ்கெட்டுகள் உள்ளன எனக் கூறியுள்ளார். சந்தேகத்தின்பேரில் அந்த 2 அட்டை பெட்டிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அதில், நிறம் மாறும் ஆப்ரிக்க நாட்டு பச்சோந்திகள் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த வாலிபரை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

மேலும், பெசன்ட்நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின காப்பகத்தின் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விமான நிலையத்துக்கு வந்து, அட்டை பெட்டியில் இருந்த ஆப்ரிக்க பச்சோந்திகளை ஆய்வு செய்தனர். அந்த வாலிபரிடமும் விசாரித்தனர். அதில், அவை முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த ஆப்ரிக்க பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், இங்கு வெளிநாட்டு நோய்க்கிருமிகள் பரவி விலங்குகள், பறவைகள் மற்றும் மனித உயிர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று வன உயிரின காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு எந்த விமானத்தில் ஆப்ரிக்க பச்சோந்திகள் கடத்தி வரப்பட்டதோ, அதே விமானத்தில் அவற்றை திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அவற்றை கடத்தி வந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அந்த அட்டை பெட்டிகளில் 402 பச்சோந்திகள் இருந்த நிலையில், அவற்றில் 67 மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவற்றை அகற்றிவிட்டு, மீதமுள்ள 335 பச்சோந்திகளை மீண்டும் தாய்லாந்துக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. பிடிபட்ட தமிழக பயணியை கைது செய்து, இந்த பச்சோந்திகளை எதற்காக கடத்தி வந்தார் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

The post தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thailand ,Meenambakkam ,Bangkok ,Chennai airport ,Dinakaran ,
× RELATED தாய்லாந்து தீவில் ஒரு புது அனுபவம்; நடுக்கடலில் மிதக்கும் தியேட்டர்