×

திருவண்ணாமலையில் மயானப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்ட எதிர்ப்பு

*பொதுமக்கள் திடீர் மறியல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மயானப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஈசான்யம் பகுதி, அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே அருந்ததியர் சமூகத்தினருக்கான மயானம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் மினி லாரிகளில் கொண்டுவரப்பட்டு இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கிரிவலப்பாதையில் அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து அவலூர்பேட்டை சாலையை இணைக்கும் இணைப்பு சாலை வழியாக கடந்து செல்வோரும் பெரிதும் அவதிபடுகின்றனர்.

இந்நிலையில், நேற்று அருந்ததியர் சமூகத்தினருக்கான மயானப்பகுதியில், தன்னார்வ அமைப்புக்கு சொந்தமான மினிலாரி மூலம் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் தகவல் அறிந்து, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்காக வந்த மினிலாரியை சிறைபிடித்து போாராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இணைப்பு சாலையில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், நகராட்சி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

The post திருவண்ணாமலையில் மயானப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்ட எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Arundhatiyar ,Avalurpet road ,Tiruvannamalai Isanyam ,
× RELATED கனமழை காரணமாக திருவண்ணாமலை...