×

பக்கத்து வீட்டு சண்டையை தடுக்க முயன்றவர் கொலை: 3 பேர் கைது

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட செலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (33). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (27). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு செலையனூர் கிராம நுழைவாயில் அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் தட்சிணாமூர்த்தி அங்கிருந்து வீட்டிற்கு சென்று, தனது உறவினர்களான பிரபாகரன் (25), அவரது தம்பி சிவகுமார் (23) ஆகியோரிடம், தன்னை சந்திரசேகர் போதையில் தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கபடுத்திவிட்டான், என்று கூறியுள்ளார். இதனையடுத்து பிரபாகரன், சிவகுமார் ஆகிய இருவரும் சந்திரசேகரின் வீட்டிற்கு சென்று, அவரிம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்த சந்திரசேகரின் பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் (38), வெளியே வந்து இரு தரப்பினர் சண்டையை விலக்கி விட்டு, வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். அதற்கு சிவகுமார், பிரபாகரன் ஆகியோர், ‘நீ என்ன அவனுக்கு வக்காலத்தா’ என கேட்டு சுரேசை சரமாரியாக தாக்கி, எட்டி உதைத்து கீழே தள்ளினர். நிலைதடுமாறி கீழே விழுந்த சுரேஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதை பார்த்து சிவகுமார், பிரபாகரன் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கதினர், படுகாயமடைந்த சுரேஷை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரபாகரன், சிவகுமார், தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்….

The post பக்கத்து வீட்டு சண்டையை தடுக்க முயன்றவர் கொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dakshinamoorthy ,Selayanur ,Palnallur panchayat ,Sriperumbudur ,Dinakaran ,
× RELATED தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு