×

மனைவியின் தகாத உறவால் வந்த வினை; கணவரை கட்டையால் தாக்கி கொன்ற கள்ளக் காதலன், அவரது தம்பி கைது: ஒரகடத்தில் பயங்கரம்

ஸ்ரீபெரும்புதூர்: மனைவியுடன் தகாத உறவை கண்டித்த கணவரை கட்டையால் அடித்துக்கொலை செய்த கள்ளக்காதலன், அவரது தம்பி ஆகியோரை கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (35). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். ஒரகடம் பகுதியில் பானிபூரி கடை நடத்திவரும் திருப்பத்துரை சேர்ந்த மணிகண்டன் (30)என்பவருக்கும் ரவிக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நெருங்கிய நண்பர்களாக பழகியுள்ளனர். இதன்காரணமாக மணிகண்டனை தனது வீட்டுக்கு ரவி அடிக்கடி அழைத்துவந்துள்ளார். அவரது வீட்டில் சாப்பிட்டு சகஜமாக பழகிவந்துள்ளார்.

இந்த நிலையில், மணிகண்டனுக்கும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதன்பிறகு ரவி இல்லாத சமயத்தில் மணிகண்டன் அடிக்கடி வீட்டுக்கு வந்து மணிமேகலையுடன் ஜாலியாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரவிக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மணிகண்டனை சந்தித்து என் மனைவியுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி என் வீட்டுக்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு 11 மணி அளவில் மணிகண்டன் நடத்திவரும் பானிபூரி கடைக்கு ரவி சென்று, ‘ என் மனைவியுடன் தொடர்பு வைக்கக்கூடாது’ என்று கூறி அவருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அவரது தம்பி கோபி ஆகியோர் சேர்ந்து அங்கு கிடந்த பெரிய கட்டையால் ரவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் விழுந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மணிகண்டன், கோபி ஆகியோர் ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரகடம் போலீசார் சென்று ரவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி மணிகண்டன், கோபி ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியின் தகாத உறவால் வந்த வினை; கணவரை கட்டையால் தாக்கி கொன்ற கள்ளக் காதலன், அவரது தம்பி கைது: ஒரகடத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Sriprahumudur ,Ravi ,Banaiur village ,Kanchipuram district ,Orkadam ,Manimegala ,
× RELATED 2 வாலிபர்கள் குண்டாசில் சிறையிலடைப்பு