×

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில், ”இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்கிட அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530/-ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக நாள்தோறும் சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்பு பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் அன்றைய நாளின் உணவூட்டு செலவினத்திற்குள் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழுக்கு பெருமை சேர்த்த பாதிரியார்...