×

சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்த பஞ்., தலைவர் விபத்தில் பலி அதிமுக முன்னாள் அமைச்சர் மீது போலீசில் மனைவி பரபரப்பு புகார்

தர்மபுரி: தர்மபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த மாஜி பஞ்சாயத்து தலைவரின் மனைவி, தனது கணவர் சாவில், அதிமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (41). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மனைவி கவிதா (34). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம், கிருஷ்ணமூர்த்தி காரிமங்கலம்-பெரியாம்பட்டி காமராஜர் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்தார்.

அப்போது, சொந்த வேலை காரணமாக, வெளியே செல்வதாக கூறி விட்டு டூவீலரில் சென்றார். தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பூலாப்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் அதிமுக அமைச்சரும், தர்மபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் மீது, முதன்முதலில் சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இது விபத்து தானா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கில், அவர் மீது வாகனத்தை மோதி, விபத்து போல் நாடகமாடி உள்ளனரா? என்ற கோணங்களில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கவிதா, காரிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘தனது கணவர் இறப்பில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளது. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். மாஜி பஞ்சாயத்து தலைவர் சாவில், அதிமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்பிருக்கலாம் என அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்த பஞ்., தலைவர் விபத்தில் பலி அதிமுக முன்னாள் அமைச்சர் மீது போலீசில் மனைவி பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dharmapuri ,Savil ,minister ,KP Anpahagan ,Panj ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது