×

ஒருங்கிணைந்த சேவை மையம், முதியோர் பெண்கள் காப்பகங்களை மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜூன் 14: திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் காப்பகங்களை மாநில மகளிர் ஆணைய தலைவர் அ.ச.குமரி ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் அ.ச.குமரி ஆய்வு நடத்தினார். செய்யாறு பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் நடத்தும் முதியோர் காப்பகத்தை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலையில், மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு நடத்தினார்.

மேலும், மனநலன் பாதித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் மீட்பு முயற்சிகளுக்கான மன நல அவசர ஆலோசனை மையத்தையும், அதன் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். அதோடு, மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவது குறித்து உளவியல்துறை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, பணியிடங்கள் மற்றும் தனியிடங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு 181 உதவி எண் மூலம் சேவை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். அதேபோல், 1098 குழந்தைகளுக்கான உதவி எண், மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு எண்கள் 14567 ஆகிய உதவி எண்களின் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், உதவிகள் கோரும் நபர்களுக்கு இந்த மையத்தில் எந்தெந்த வகையில் உதவிகள் அளிக்கப்படுகிறது என ஆய்வு நடத்தினார்.

அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் அனுமதித்து முறையாக சிகிச்சை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலையில் செயல்படும் தனியார் தொண்டு நிறுவனத்தின் பெண்கள் பாதுகாப்பு இல்லம், முதிேயார் இல்லம், தனியார் பெண்கள் தங்கும் விடுதிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் மாணவர் வடுதிகள் ஆகியவற்றை மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யாதேவி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி எலிசபெத்ராணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்கள் ஆய்வுக்கு பிறகு, இன்று கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மாநில மகளிர் ஆணைய தலைவர் அ.ச.குமரி ஆய்வு நடத்த உள்ளார்.

The post ஒருங்கிணைந்த சேவை மையம், முதியோர் பெண்கள் காப்பகங்களை மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Integrated Service Centre ,State Women's Commission ,Tiruvannamalai District ,Tiruvannamalai ,President ,A.S. Kumari ,Tamil Nadu ,Seyyar… ,State Women's Commission Chairman ,Dinakaran ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!