மதுரை: பக்ரீத் பண்டிகையின் போது மாநகராட்சி அனுமதி இல்லாத இடங்களில் ஆடு, மாடுகளை அறுத்து பலியிட தடை விதிக்க வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ‘‘மனுதாரர் பக்ரீத் பண்டிகையின் போது தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று மாநகராட்சி அனுமதிக்காத பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுவதை தடை செய்ய கோரி உள்ளார். ஆனால், பக்ரீத் பண்டிகை வரும் 17ம் தேதி இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில் இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுவோர் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. எனவே மனுதாரர் இஸ்லாமிய சமூகத்தினரையோ அல்லது ஆடு, மாடுகளை பலியிடும் சமூகத்தினரையோ எதிர்மனுதாரராக இணைத்து மனு தாக்கல் செய்யலாம்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post பக்ரீத் பண்டிகையின்போது பொது இடத்தில் ஆடு, மாடுகள் பலியிட தடை விதிக்கமுடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.