×
Saravana Stores

40க்கு 40 வெற்றியால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம் என கேட்பது அவர்களின் தோல்வி புலம்பல் சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: 40க்கு 40 வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன லாபம் எனக் கேட்பது எதிர் முகாமினரின் தோல்வி புலம்பல் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.திமுக தலைவரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜூன் 15ம் நாள் கோவை கொடீசியா அரங்கில் முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. 40க்கு 40 நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அந்த வெற்றியையும், அத்தகைய வெற்றிப்பாதையில் பயணிக்க எந்நாளும் நம்மை இயக்குகின்ற ஆற்றலாக விளங்கும் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையும், 40/40 என்கிற மகத்தான வெற்றிக் கூட்டணிக்குத் தலைமையேற்கும் பொறுப்பேற்ற உங்களில் ஒருவனான எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் இவ்விழா நடக்கிறது.வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தி, மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் முழங்கிடவும், அவரவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கவனித்து நிறைவேற்றிடவும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.

ஒன்றிய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது 40க்கு 40 என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன லாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் 40க்கு 40 உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றி தான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்.

1957 பொதுத் தேர்தலில் பங்கேற்று மக்களவையில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்த திமுகதான், இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில், அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடமிருந்து உறுதி மொழியைப் பெற்றுத் தந்தது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத் தந்த அந்த உறுதிமொழி தான் இன்றளவிலும் இந்தி ஆதிக்கத்திலிருந்து பெரும்பான்மையான மாநிலங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.

1962ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில், ‘நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்’ என்று பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான், மாநில உரிமைகளுக்கான வலிமையான முதல் குரல். அந்த ஒற்றைக் குரலின் தொடர்ச்சியாகத் தான் இன்று பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தும் உரிமைக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் கூட்டணி கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும்.

அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக் கூடியவர்களாக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
40க்கு 40 என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். காணப் போகும் களங்கள் அனைத்திலும் திமுக வெல்லட்டும். கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

The post 40க்கு 40 வெற்றியால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம் என கேட்பது அவர்களின் தோல்வி புலம்பல் சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Legislative Assembly elections ,Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,2026 Assembly elections ,
× RELATED ஆன்லைன் மூலம் தள்ளுபடி விலையில்...