கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில்பா.ஜ 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த 2019ம் ஆண்டு மாநில தலைவராக திலீப் கோஷ் இருந்தபோது பாஜ 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை பாஜ தலைவர்களுக்கு தொகுதியை மாற்றி வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பாஜவின் முக்கிய தலைவர்களும் தோல்வியடைந்தனர். மாநில பாஜ தலைமையானது அனுபவமிக்க தலைவர்களை அவர்களின் தொகுதியில் இருந்து மாற்றி அறிமுகமில்லாத இடங்களில் போட்டியிட தேர்வு செய்தது குறித்து நேற்று முன்தினம் திலீப் கோஷ் கேள்வி எழுப்பி இருந்தார்.
கட்சியின் பழைய பாதுகாவலர்களை ஒரங்கட்டியது கட்சி செய்த தவறு என்றும், புதியவர்கள் மற்றும் அனுபவமில்லாத தலைவர்ளை களமிறக்கியுள்ளதால் தேர்தலில் தோல்வி காத்திருக்கிறது என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இந்நிலையில் திலீப் கோஷ் தனது எக்ஸ் பதிவில், ‘ஓல்ட் இஸ் கோல்ட்” மறைமுக செய்தியை பதிவிட்டுள்ளார். தனது பழைய தொகுதியான மெதினிப்பூரில் இருந்து இந்த முறை பர்த்மான் -துர்காபூர் தொகுதியில் போட்டியிட செய்தது தவறு என்பது இப்போது உறுதியாகிவிட்டதாக கூறியிருந்தார்.
The post பழைய தொகுதியை மாற்றியதால் மேற்கு வங்க பாஜவில் அதிருப்தி appeared first on Dinakaran.