×

40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவிகித வெற்றி வாகை சூடிய முதல்வர்

சென்னை: ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எடுத்துரைத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவிகித வெற்றி வாகை சூடினார் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்துள்ள 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றி தனித்தன்மையானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது, முதலமைச்சர் இதற்கு முன் பெற்ற வெற்றிகளை எல்லாம்விட பெருமைக்குரிய மகத்தான வெற்றியாகும். மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற 2018-ஆம்ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியைத் இந்தியா கூட்டணி கட்டமைத்த முதல்வர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து “இந்தியா” எனும் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கட்டமைத்து, இன்று தேசிய அளவில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .

அதுமட்டுமின்றி கூட்டணிக் கட்சிகள் கட்டுப்கோப்பாக இணைந்து செயல்படுவதற்கும் ஊக்கம் தந்து உறுதுணையாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாக முகவர்கள் கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார். தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே, நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பாக முகவர்கள் கூட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தினார்.

பேசு பொருளாக மாறிய உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரல்: தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் இந்தியாவைக் காப்போம், உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரல் எனும் தலைப்புகளில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அவற்றை பொதுமக்களிடையே பேசு பொருளாக மாற்றி இந்தியா கூட்டணி வெற்றி பெற வழிவகுத்தார்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியை கட்டமைத்தவர்: தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து அழைத்துப்பேசி தமிழ்நாடு + புதுவை மாநிலங்களில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஏறத்தாழ 50 சதவிகித தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கெல்லாம் மிகவும் பெருந்தன்மையுடன் பகிர்ந்தளித்தார். அவற்றுள்ளும் எளிதாக வெற்றிபெறக் கூடிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கினார். மிகவும் கடுமையாக முயன்றால்தான் வெற்றிபெற முடியும் என்றிருந்த தொகுதிகளை எல்லாம் தி.மு.கழகத்தை போட்டியிடச் செய்தார்.

2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாற்பதுக்கு நாற்பது: 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சுற்றுப் பயணத்தில்: தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன் தேதிவாரியாக எந்தெந்த நாட்களில் எந்தெந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்து அறிவித்தார். தி.மு.க. தொண்டர்களுக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் தொண்டர்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெற வேண்டிய வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அறிக்கைகளையும் கடிதங்களையும் பத்திரிகைகள் வாயிலாகவும், செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டு ஆர்வத்தை வளர்த்தார். ஓய்வு சிறிதும் இல்லாமல் தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கித் தொய்வின்றித் தொடர்ந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற 8 தேர்தல்களிலும் தொடர் வெற்றி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல், 2022-இல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2024 நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் ஆகிய 8 தேர்தல்களில் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றிகளை ஈட்டிய இணையற்ற தலைவர்.

பிரச்சாரக் கூட்டங்களில் சாதனைத் திட்டங்கள்: தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத் திட்டம், 1 கோடியே 15 இலட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மாபெரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மகளிர்க்கும் மாணவர்களுக்கும், மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம், படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகள் பெற வழிவகுத்திடும் நான் முதல்வன் திட்டம், மக்களைத்தேடி அதிகாரிகள் சென்று அவர்களின் குறைகளைக் குறிப்பிட்ட நாள்களில் தீர்த்து வைக்கும் மக்களுடன் முதல்வர் திட்டம், பசியோடு பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சூடான சுவையான சத்தான காலை உணவு வழங்கி கல்வியில் நாட்டம்

செலுத்திடச் செய்யும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ; மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப் பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ! “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்” முதலான சிறப்பான திட்டங்களை எல்லாம் மக்களிடம் துல்லியமாக எடுத்துரைத்தார்.

பா.ஜ.க.வின் பொய்முகத்தை அடையாளம் காட்டியவர்: 10 ஆண்டு காலம் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்த பாரதீய ஜனதா கட்சி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் வாய்ஜாலம் காட்டிய பொய்முகத்தை தமிழ்நாடு முழுவதும் மக்கள் அடையாளம் காணச் செய்தார்.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்தவர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்பது; அதன்படி, சொல்லிச் செய்த திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுக் காட்டினார். அவை மட்டுமல்லாமல் தேர்தலின் போது சொல்லாத செய்திகளையும் திட்டங்களாக அறிவித்துச் செயல்படுத்திய சாதனைகளை எல்லாம் மக்கள் மனதில் பதியும்படிக் கூறினார்.

இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள சமத்துவ, சமதர்ம, ஜனநாயகக் குடியரசு என்ற கோட்பாடுகளை மிதித்து, மத ஆதிக்க வெறி உணர்வுகளை வளர்த்து இந்திய நாட்டு மக்களைப் பிளவுபடுத்தும் ஆணவ அதிகாரத்தைச் செலுத்திடும் பாரதிய ஜனதா ஆட்சியின் முறையற்ற செயல்களை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களின் ஆதரவைத் திரட்டினார்.

ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களையும் தொண்டர்களையும், தொடர்பு கொண்டு தொகுதி நிலவரங்களைக் கேட்டறிந்து தொய்வின்றி ஊக்கமுடன் தேர்தல் பணிகளை ஆற்றிட அறிவுரைகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இத்தகைய பணிகளின் வாயிலாக நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் நாற்பதும் நமதே என்று கூறிய முழக்கம் மெய்பட்டு; நாற்பதிலும் நூற்றுக்கு நூறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான இந்தியா கூட்டணி கண்டுள்ள வெற்றி என்பது மகத்தான வெற்றியாகும்.

இது இந்த 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள சரித்திரச் சாதனை என்பதை ஒரு புதிய வரலாறாகக் காலம் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

The post 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவிகித வெற்றி வாகை சூடிய முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Shri Narendra Fadnavis ,K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...