×

மக்களவை தேர்தலில் அமோக வெற்றி அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்: ஆடிப்பாடி மகிழ்ந்தனர்; பட்டாசு வெடித்து உற்சாகம்

சென்னை: மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. தர்மபுரியில் பாமகவும், விருதுநகரில் தேமுதிகவும் மட்டும் சற்று முன்னிலை பெற்று வந்தது. மீதியுள்ள 37 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலை வகித்து வந்தனர். தொடர்ந்து முன்னிலை வகித்து வந்ததையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு காலை முதல் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஒவ்வொரு சுற்றிலும் திமுக கூட்டணி கட்சியினர் முன்னிலை நிலவரம் தெரியவரும் போதும் அவர்கள் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதனால், நேற்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் களை கட்டியது. மதியத்துக்கு மேல் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழ்நிலை வந்ததால், மேலும் தொண்டர்கள் அதிக அளவில் அண்ணா அறிவாலயத்திற்கு வர தொடங்கினர். இதனால், அண்ணா அறிவாலயம் வெற்றிக் களிப்பில் மெருகேறியது. சாலையில் சென்றவர்களுக்கும் லட்டுகள் வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் தமிழகம் முழுவதும் திமுக வெற்றிக் கொண்டாட்டங்களால் களை கட்டியதை பார்க்க முடிந்தது. அனைத்து மாவட்ட திமுக அலுவலகங்கள் முன்பாக தொண்டர்கள் திரண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

The post மக்களவை தேர்தலில் அமோக வெற்றி அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்: ஆடிப்பாடி மகிழ்ந்தனர்; பட்டாசு வெடித்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Lok Sabha ,Anna ,Vidyalaya ,Chennai ,Lok Sabha elections ,Anna Vidyalaya ,Tamil Nadu ,
× RELATED மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய...