×

குடும்ப தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை தற்கொலை

பூந்தமல்லி: போரூரில் குடும்ப தகராறில் பெற்ற மகனை ஏரியில் வீசிய தந்தையை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர், தன்னுடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி, அருகில் உள்ள போரூர் ஏரியில் வீசிவிட்டு தப்பினார். அப்போது, ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக ஏரியில் வீசப்பட்ட சிறுவனை உயிருடன் மீட்டு, போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தலைமைசெயலக காலனியை சேர்ந்த, அவனது தந்தை மோகன்ராஜ் என்று தெரியவந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரியாவை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, தனது 3 வயது மகன் தர்சனை தூக்கி வந்து கோபத்தில் போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், சிறுவனின் தாயார் பிரியாவிடம் அவனை போலீசார் ஒப்படைத்தனர்.

தலைமறைவான தந்தையை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாகக் கிடந்தவர், 3 வயது மகனை ஏரியில் தூக்கி வீசிய தந்தை மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடும்ப தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Borur ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...