சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் மே 2ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை விடப்பட்டாலும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரம் 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். முதல் வாரத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தலைமையிலும், இரண்டாவது வாரத்தில் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையிலும், 3வது வாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலும், 4வது வாரத்தில் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் தலைமையிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில் கோடை விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, வழக்கமான நீதிமன்ற பணிகள் நாளை முதல் தொடங்குகிறது.
முதல் அமர்வில் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக், இரண்டாவது அமர்வில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு, 3வது அமர்வில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார், 4வது அமர்வில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல், 5வது அமர்வில் நீதிபதிகள் எம்.சுந்தர், கே.கோவிந்தராஜன் திலகவதி, 6வது அமர்வில் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, பி.தனபால், 7வது அமர்வில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன், 8வது அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோரும், நீதிபதிகள் அனிதா சுமந்த், பி.வேல்முருகன், ஜி.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 27 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பர்.
The post ஒரு மாத கோடை விடுமுறை முடிந்தது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.