×

திரிணாமுல் காங். தொண்டர்கள் மீது குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த குண்டுவீச்சில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் மக்களவை தொகுதியில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் உள்ள பாங்குர் பகுதியில் நேற்று முன்தினம் பிரசாரத்தை முடித்து கொண்டு திரிணாமுல் கட்சியினர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இந்திய மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) என்ற கட்சியின் எம்எல்ஏ நவ்சாத் சித்திக்கின் ஆதரவாளர்கள் திரிணாமுல் தொண்டர்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் படுகாயமடைந்தனர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களை மாநில அமைச்சர் அருப் பிஸ்வாஸ், திரிணாமுல் வேட்பாளர் சயானி கோஷ் மற்றும் தலைவர்கள் சென்று பார்வையிட்டனர். ஆனால், திரிணாமுல் கட்சியின் குற்றச்சாட்டை ஐஎஸ்எப் மறுத்துள்ளது. அந்த கட்சி எம்எல்ஏ நவ்சாத் சித்திக் கூறும்போது, ‘‘ஐஎஸ்எப் தொண்டர்களை தாக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்தான் குண்டுகளை வீசினர். இந்த குண்டுவீச்சில் அந்த கட்சி தொண்டர்களே படுகாயமடைந்துள்ளனர். ஜாதவ்பூர் தொகுதிக்கு உட்பட்ட பங்கூரில் திரிணாமுல் கட்சிக்கு தோல்வி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தோல்வி பயத்தினால்தான் இது போன்ற தாக்குதல்களை நடத்தி எங்கள் மீது பழிபோடுகின்றனர்’’ என்றார்.

 

The post திரிணாமுல் காங். தொண்டர்கள் மீது குண்டுவீச்சு: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Trinamool Congress ,Kolkata ,West Bengal ,Jadavpur Lok Sabha ,Bangur ,Trinamul Congress ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் மோதல்: ஓட்டல் உரிமையாளரை தாக்கிய நடிகர்