×

தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன்; பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்: வீடியோ வெளியிட்ட வைகோ

சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன். பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று தனக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தில் பொது ஊழியம் செய்கின்ற சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன். கீழே விழுந்ததில்லை. ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றபோது, தங்கி இருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருந்த திண்ணையில் ஏறினேன்.

அப்போது நிலை தடுமாறி விழுந்து விட்டேன். தலையிலோ, முதுகெலும்பில்லோ அடிபட்டிருந்தால் நான் இயங்க முடியாமல் போயிருக்கும். நல்ல வேளையாக இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் மருத்துவரிடம் பரிசோதித்து அவரின் அறிவுரைப்படி சென்னைக்கு உடனடியாக சிகிச்சைக்காக புறப்பட்டு வந்தேன். பயப்படத் தேவையில்லை; கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஓய்வு தேவை. அந்த ஓய்வு இப்போது கிடைத்திருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போலோ மருத்துவமனையில் இன்று எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

தோள்பட்டை எலும்பு இரண்டு சென்டிமீட்டர் உடைந்துள்ளது. நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு உள்ளேன். நான் முன்பு போன்று இயங்க முடியுமா? என்று யாரும் சந்தேகம் பட வேண்டாம். நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞர் சொல்லியிருக்கிறார். பொது வாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது, தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய சேவைகளை செய்வதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். வைகோ முழு நலத்தோடு, முழு ஆரோக்கியத்தோடு வருவேன் என்பதை எனக்காக கவலைப்படும் உள்ளங்களுக்கு தெரிவித்து என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய காத்திருக்கிறேன்; பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்: வீடியோ வெளியிட்ட வைகோ appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vaiko ,CHENNAI ,Madhyamik General Secretary ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...