×

கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி,  கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை, மே 29: கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாது என்று காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை தடுக்க சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை இரவு 9.30 மணிக்கு மேல் காவல் துறையினர் அங்கிருந்து துரத்தி விடுகிறார்கள்.

கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை பின் இரவு வரை இருக்க அனுமதிக்கக் கோரி டி.ஜி.பி.க்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலித்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை செல்லும் மக்களை துரத்தக் கூடாது என்று காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர், இந்த மனுவுக்கு தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

The post கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி,  கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Court ,DGP ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,Chennai Metropolitan Police ,Commissioner ,ICourt ,Dinakaran ,
× RELATED சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு