×

பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது தமிழ்நாடு; உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49% பெற்று இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை: உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49 சதவீதம் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், இது அகில இந்திய சராசரியை காட்டிலும் 2 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி துறையின் சார்பில் எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக, இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கிடும் நான் முதல்வன் திட்டம், மாணவிகள் உயர்கல்வியை தொய்வின்றி தொடர மாதந்தோறும் ரூ1000 வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தொழில் திறன் மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி மானிய திட்டம், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம், மாணவர்களின் கல்வி தேவையை நிறைவு செய்யும் உங்களை தேடி உயர்கல்வி உள்ளிட்ட பல திட்டங்களால் தரத்திலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழகத்தில் உயர்கல்வி மேம்படுத்தப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு இலவச கல்வி, பட்டியலின மாணவர்களுக்கு இலவச கல்வி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் பயனாக இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு பல்கலைக்கழகங்களும், 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளும், அதிக மருத்துவ கல்லுரிகளும், புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அமையப் பெற்று தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49 சதவீதம் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிகிதத்தை காட்டிலும் 2 மடங்கு அதிகம். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் 6ம் முதல் 12ம் வகுப்பு வரை பயின்று, இடைநிற்றல் இன்றி உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் 6.9.22 அன்று முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனடைகின்றனர்.

இத் திட்டத்தினால் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையில் உதித்த திட்டமே நான் முதல்வன் திட்டமாகும். இதன் வாயிலாக, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான தகவல்களை குழுவின் மூலம் வழங்கி வழிகாட்டுதல், மாணவர்கள் தங்களின் சொந்த ஆர்வங்களையும் திறன்களையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளம் அமைத்தல், பட்டப்படிப்பு முடிக்கும் வரை தடையற்ற உயர்கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதி செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும். இதுவரை 27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகள் பெற்று மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை ரூ3,014 கோடியில் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் முன்னோடி திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. தொழில் கல்லூரிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணத்திற்காக ரூ213.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத சிறப்பு உள் இடஒதுக்கீட்டின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் 28,601 அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகை மாநிலத்திலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் நேரடி சேர்க்கை பெற்றுள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்கள் தொடர்ந்து உயர்கல்வியினை தொடர ஆண்டுதோறும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகையாக ரூ1,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 10,000 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களின் பயிற்சியினை மேம்படுத்திட தொடர்ந்து 25 நாட்களுக்கு தொழிலக உட்பயிற்சி வழங்கும் வகையில் தலா ஒரு மாணாக்கருக்கு ரூ16,600 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அந்த நிறுவனத்திலேயே வேலை பெறும் வாய்ப்பினையும் பெறுகிறார்கள்.

பிற மொழிகளை கற்பதில் ஆர்வமுள்ள மாணக்கர்களில் வேலைவாய்ப்பு மற்றும் போதுமான கல்வியினை பெற்றிடும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணக்கர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகள் கற்று தரப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 1,200 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர். ஆராய்ச்சி மானிய திட்டம் முதல்வரின் தொலைநோக்கு பார்வையில் உதித்த திட்டமே ஆராய்ச்சி மானிய திட்டமாகும். கடந்த 2023-24 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் ரூ50 கோடி உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் பயனாக, மாணவர்களிடம் ஒளிந்துள்ள புதுமையான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், வணிக மாதிரிகள் மற்றும் புதிய தொழில்நுட்ப தயாரிப்பு முறைகளை ஊக்குவிக்கவும், தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை தயாரித்து வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டு, நாளது வரையில் 1,960 ஆராய்ச்சி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. காமராஜர் கல்வி மேம்பாட்டு திட்டம் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில் மேம்படுத்திட ரூ1000 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. முதற்கட்டமாக, 2022-23ம் ஆண்டிற்கு ரூ250 கோடியும். 2023-24ம் ஆண்டிற்கு ரூ200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்லூரிகளுக்கு தேவையான கூடுதல் கட்டடங்கள், புதிய கல்லூரிகளை கட்டுதல், ஆய்வகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பரிசுகள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 10 இஸ்ரோ விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக தலா ரூ25 லட்சம் பரிசு வழங்கி முதல்வர் பாராட்டியுள்ளார். உயர் கல்வித்துறையில் நிறுவன வள திட்டமிடல் மற்றும் மென்பொருளுடன் கூடிய ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை அமைப்பினை ரூ150 கோடி செலவில் உருவாக்கி, 14 அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றில் டிஜிட்டல் மாற்றத்தினை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரந்தர பேராசிரியர்களை கொண்டு நிரப்பிடும் வரை மாணவர்களின் கல்வி பாதிக்காவண்ணம் தொகுப்பூதிய அடிப்படையில் 1,750-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டிடம் கடந்த மூன்றாண்டுகளில் 27 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கல்லூரிகள் முதல்வரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன. மேலும், 2 கல்லூரிகளில் கட்டட பணிகள் முடியும் தருவாயிலும், 23 கல்லூரிகளில் கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. சென்னை, மாநில கல்லூரியில் 5,564 சதுர மீட்டர் பரப்பளவில் ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட நபர்கள் அமரக்கூடிய வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் நவீன அரங்கம் ரூ63 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் தமிழ்நாட்டு மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை” திட்டம் முதல்வரால் 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 120 மாணவர்களுக்கு மாதம் ரூ25,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. முதல்வரின் தொலைநோக்கு பார்வையில் உதித்த பல்வேறு உன்னத திட்டங்கள் உயர்கல்வி துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக, இன்று தமிழ்நாடு உயர்கல்வியில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்வதோடு மட்டுமின்றி; ஏனைய பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது தமிழ்நாடு; உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49% பெற்று இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Govt ,India ,CHENNAI ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...