×

பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்ததும் பல்வேறு புதிய செயல்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ரூ.1 கோடியே 22 லட்சம் மாணவர்களுடைய பெற்றோர்களின் செல்போன் எண்கள் வாட்ஸ் அப் குழு மூலமாக இணைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிப்பதற்கு கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்களின் கல்வி மேம்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பெற்றோர்களுடைய மொபைல் எண்கள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்றுவரை 80 லட்சத்து 30 ஆயிரம் மொபைல் எண்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள்ளாகவே மீதம் இருக்கக்கூடிய அனைத்து பெற்றோர்களின் மொபைல் எண்களும் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்திருப்பதோடு ஸ்மார்ட்போன்கள் இல்லாத பெற்றோர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரிகள் பல அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளனர். பிள்ளைகளுடைய செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பள்ளி திறந்ததும் பெற்றோர்களை அழைத்து பள்ளி மேலாண்மை குழு மூலமாக ஸ்மார்ட் போன் அவசியம், அதன் மூலமாக மாணவர்களுக்கு எந்த மாதிரியான தகவல்கள் கிடைக்க உள்ளது, தேவையின் முக்கியத்துவம் என்ன என்பதை எல்லாம் பள்ளி மேலாண்மை குழு மூலமாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இத்தகைய புதிய திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.

The post பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும்: கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Education Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு...