கோவை மே 24: கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே இரு கட்டங்களாக மேம்பால பணிகள் 270 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. முதல் கட்டமாக உக்கடத்திலிருந்து பாலக்காடு பொள்ளாச்சி ரோடு மேம்பால பணிகள் முடிவடைந்தது. இரண்டாவது கட்டிடமாக ஏறு, இறங்கு தளங்களுடன் வாலாங்குளம், சுங்கம் இணைப்பு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மேம்பால பணிக்காக பல்வேறு இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
குறிப்பாக கரும்புக்கடை, ஆத்துப்பாலம் சந்திப்பு, போத்தனூர் ரோடு, பாலக்காடு ரோடு பகுதியில் இருந்த சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இந்த பகுதியில் மேம்பால பணிகள் நடத்தப்பட்டது. செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களும் இடிக்கப்பட்டு அந்த பகுதியில் இறங்கு தளம் அமைக்கப்பட்டது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டிற்குள் இருந்து வாலாங்குளம், சுங்கம் நோக்கி செல்லும் இறங்குதளம் கட்டும் பணிக்காக சமீபத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன. மற்றொரு பகுதியில் இருந்த 20 வீடுகள் உட்பட 40 கட்டிடங்கள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் இடிப்பு பணிகள் நடத்தப்பட்டது. கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பின்னர் இந்த பகுதியில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் பணிகள் நடத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை என தெரிவித்தனர். ஒரிரு மாதத்தில் பணிகளை முடித்து மேம்பாலத்தை திறக்கும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
The post மேம்பால பணிக்காக 40 கட்டடங்கள் இடிப்பு appeared first on Dinakaran.