×

நோ பார்க்கிங்கில் நிறுத்தம் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம்: காவல்துறை அதிரடி

சென்னை: நோ பார்க்கிங் பகுதியில் பேருந்துகளை நிறுத்தியதாக 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற பேருந்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காவலர் ஆறுமுகப்பாண்டி தான் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து வாரன்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த விழுப்புரம் போக்குவரத்து கழக பேருந்துக்கு செம்மஞ்சேரி அருகே போக்குவரத்து போலிசார் நோ பார்க்கிங் மற்றும் போக்குவரத்து இடையூறாக வாகனத்தை நிறுத்தியதாக ரூ.1000 அபராதம் விதித்தனர். அதேபோல மாநகர பேருந்து ஒன்றுக்கும் தாம்பரம் நகர போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.

இதேபோல் தாம்பரம், பெருங்களத்தூர் உள்பட சென்னை புறநகர் மற்றும் சென்னை மாநகர பகுதிகளில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனருடன் வாக்குவாதம் செய்த காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

The post நோ பார்க்கிங்கில் நிறுத்தம் 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம்: காவல்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arumukhapandi ,Chettikulam ,Nagercoil ,Thoothukudi ,Tirunelveli ,
× RELATED நீயும் நானும் வேற இல்ல காவலர் –...