×

அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம்.

அதாவது அயலகத் தமிழர் (வெளிநாடு): இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும்/கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearance பெறப்பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவர்.

அயலகத் தமிழர் (வெளிமாநிலம்): இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15ம் தேதி முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம்.

விபத்துக் காப்பீடு: அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் இவ்விபத்து காப்பீட்டில் சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) ரூ. 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.395+ ஜிஎஸ்டி தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.10,00,000 காப்பீட்டு தொகைக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.700+ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த சந்தாக்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான இக்காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் பேரில் விபத்து காப்பீட்டு திட்டத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தி இணையலாம். இத்திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, முதன்மை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கரோனரி ஆர்டரி பை-பாஸ் கிராப்ட்ஸ், இதய வால்வு அறுவை சிகிச்சை, பக்கவாதம், மாரடைப்பு, கோமா, நோய்கள் வரும்.

கல்வி உதவித்தொகை திட்டம்: இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள மகன்/மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 10ம் வகுப்பு ரூ.3000 உதவித் தொகை, 11 மற்றும் 12ம் வகுப்பு (மேல்நிலைக் கல்வி)-ரூ.4000, தொழிற் பயிற்சி கல்வி, பொறியியல் பட்டயப் படிப்பு, மருத்துவப் பட்டயப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்டயப் படிப்புக்கு ரூ.5,000 உதவி தொகை.

பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு, விவசாய படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.8000 உதவி தொகை, பொறியியல் பட்ட மேற்படிப்பு, மருத்துவ பட்ட மேற்படிப்பு, சட்ட மேற்படிப்பு, விவசாய மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சி மேற்படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன், மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) திருமண உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும். பழங்குடியின பிரிவினர் குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பிற பிரிவினர் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களை அணுகும் நிலையில் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும், வாரியத்தில் உறுப்பினர் பதிவும் மேற்கொள்ளப்படும்.
அயலகத் தமிழர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் முறை மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு இவ்வாணையரக வலைதளத்தினை (https://nrtamils.tn.gov.in) பார்க்கலாம்.

அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயரவுள்ள தமிழர்கள், அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து அரசின் நலத்திட்டங்களை பெற்றிட தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

* எப்படி உறுப்பினர் ஆவது?
அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், வாரியத்தில் உறுப்பினராகுதல் தொடர்பான சந்தேகங்களுக்கும் தீர்வுகாண இவ்வாணையரகத்தின் கட்டணமில்லா தொலைபேசி சேவை மையத்தினை தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா உதவி எண் 18003093793 (இந்தியாவிற்குள்), 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு), 8069009900 (Missed Call) கொடுக்க வேண்டும்.

The post அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Ayalak Tamil Welfare Board ,Tamil Nadu Government ,Chennai ,Tamils ,Consular Tamil Welfare Board ,Tamil Nadu Government Welfare Department ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...