×

மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மூதாட்டியிடம் தங்க தாலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த வாணியஞ்சத்திரம் கிராமம் கிருஷ்ணன் கோயில் தெருவில் வசித்து வருபவர் நந்தகோபால், இவரது மனைவி பிரபாவதி (59). இவர் நேற்று காலை வீட்டு வாசலில் குழாய் மூலம் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மூதாட்டியிடம் சென்று குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளனர். மூதாட்டி குழாய் மூலம் தண்ணீர் கொடுத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் தாலி சரடை கண் இமைக்கும் நேரத்தில் அறுத்துக்கொண்டு தப்பி ஓடினர். உடனே மூதாட்டி திருடன், திருடன் என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் திருடர்கள் ஓடி விட்டனர். இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் செய்தார். அதன் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், வெங்கல் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

The post மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Periyapalayam ,Nandagopal ,Prabhavathy ,Krishnan Koil Street, Vaniyanchathram village ,Thamaraipakkam ,
× RELATED பெரியபாளையம் அருகே ஏரிக்கால்வாய்...