×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி: படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். இச் சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அமீர் (42). இவர் வெளிநாடு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு குடும்பத்தினருடன் காரில் வந்தார். பின்னர், விமான நிலையத்தில் அப்துல் அமீரை வழியனுப்பி வைத்த குடும்பத்தினர் மீண்டும் பண்ருட்டிக்கு காரில் பயணம் செய்தனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில், காரின் முகப்பு பகுதி முழுவதும் அப்பளம்போல் நொறுங்கியது.

இடிபாடுகளில் சிக்கிய அப்துல் அமீரின் மனைவி பீனிஷா (40), மகன்கள் விஷால் (15), பைசல் (14), கார் ஓட்டுநர் சரவணன் (30) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அக்தர் (12) என்ற சிறுவனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் சடலங்களை மீட்டனர். இதையடுத்து மதுராந்தகம் போலீசார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. கார் விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கல்பாக்கம் வாயலூர் விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆனது
சென்னை எம்ஜிஆர் நகர், சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), விக்கி (28), மாதேஷ் (23), வடபழனியை சேர்ந்த ஏழுமலை (30), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் (24) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் காலை இசிஆர் சாலை வழியாக காரில் புதுவை சென்றுவிட்டு மீண்டும் இரவு சென்னை திரும்பினர்.
அப்போது, இசிஆர் சாலையில் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் சாலையின் குறுக்கே வந்த மாடு மீது கார் மோதியதில் இந்த கோர விபத்து நடந்தது. இதில் காருக்குள் இருந்த 5 பேரில் ராஜேஷ், ஏழுமலை, விக்கி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய மாதேஷ், யுவராஜ் ஆகிய 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணையில், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கிளம்பிய 5 பேரும் நடுவழியில் மதுவை குடித்துவிட்டு வந்ததாகவும், சம்பவ இடத்தில் மாடு குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாகவும் தெரியவந்தது.

The post செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் பலி: படுகாயமடைந்த 12 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Madurandakam, Chengalpattu district ,Madhurandakam ,Madurandakam ,Chengalpattu district ,Abdul Ameer ,Panruti ,Cuddalore district ,Madhurantagam ,Dinakaran ,
× RELATED இனப்பெருக்க காலம் முடிந்தது சொந்த...