×

கோடையை சமாளிக்க டிப்ஸ்…

நன்றி குங்குமம் தோழி

வெயில் நேரத்தில் வெளியில் செல்லும்போது வியர்வை, தாகம், உடல் சோர்வு என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக்கொள்ள
உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்வது அவசியம்.

*காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்துள்ளது. காய்கறிகளை பச்சையாகவோ, பாதி வேக வைத்தோ சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்ப்பது நல்லது. உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

*நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது. தர்பூசணியில் 90% தண்ணீர் என்பதால், உடலின் தண்ணீர் நிலையை பாதுகாக்கும். வெள்ளரியும் அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

*உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் மேலும் அதிகரிக்கும். வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்துபோதல், கண்கள் பொங்குவது போன்ற பிரச்னைகள் உருவாகும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் எடுத்துக்கொள்வதால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

*வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மை வந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இளநீர், பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்வதன் மூலம், அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.

*நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

*சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. வெள்ளரிச்சாற்றை முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம். நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும். நம் வீட்டில் உள்ள கடலை மாவு, மஞ்சள் பொடியே சருமத்தைப் பாதுகாக்க போதுமானது.

– கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

The post கோடையை சமாளிக்க டிப்ஸ்… appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED முகத்தில் முகம் பார்க்கலாம்!