×

மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்

மூணாறு: மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி செல்வதற்கு சுற்றுலாப்பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் மின்சாரத்துறைக்கு சொந்தமான அனைத்து படகு மையங்களிலும் பெட்ரோல், டீசல் மூலம் படகுகள் இயக்கப்படுகிறது. இதனால், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர். இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதிக்காத வகையில் பேட்டரி மூலம் இயங்கும் படகுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, மூணாறில் மின்வாரியத்துறை கீழ் உள்ள மாட்டுப்பட்டி அணையில் மாநிலத்தில் முதன்முதலாக கடந்தாண்டு ஜூலை 25ல் பேட்டரி படகின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது திருப்திகரமாக அமைந்ததால், பேட்டரி படகுகளை இயக்க மத்திய துறைமுகத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து மாநிலத்திலேயே முதன்முறையாக, மாட்டுப்பட்டி அணையில் ரூ.50 லட்சம் செலவில் 20 இருக்கைகளைக் கொண்ட பேட்டரி படகு கடந்த வாரம் பயன்பாட்டிற்கு வந்தது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேட்டரி படகில் 11 கிலோ வாட் அக்வாமாட் எலக்ட்ரிக் அவுட்போர்டு மற்றும் 28 எச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் 6,500 லிட்டர் பெட்ரோலை சேமிக்கலாம். படகுகளில் பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதால், ஆண்டு முழுவதும் 15 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கலாம். சூரிய சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மேலும், நீர்மின் துறையின் கீழ் உள்ள அனைத்து படகுகளையும், பேட்டரி படகுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இத்தகைய படகுகளில் சவாரி செய்யவே சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்’’ என்றனர்.

The post மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Mattupatti Dam ,Munnar ,Kerala ,
× RELATED மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகளை குதூகலமாக வரவேற்கும் குல்மோஹர் பூக்கள்