×

குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

சென்னை: குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என்று விசாரணை அதிகாரி கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். நிபந்தனை மீறப்பட்டால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 10ம் தேதி மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில், ஜாமீனில் வெளியேவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.

நீதிமன்றங்கள் விதித்த நிபந்தனைகளை மீறுபவர்களின் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும். கடுமையான குற்ற வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி, உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும். ஜாமீனில் வெளியேவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால், விசாரணை அதிகாரி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை ஆலோசித்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் தொடர் குற்றங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவது தடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் கடிதத்தையடுத்து, காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றங்களால் ஜாமீன் வழங்கப்பட்டாலும் நடுவர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிபந்தனை மீறிய குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என்று விசாரணை அதிகாரி கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். நிபந்தனை மீறப்பட்டால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்தி இந்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,DGP ,Jiwal ,CHENNAI ,of ,Tamil Nadu ,Shankar Jiwal ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க இரவில்...