×

மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

மூணாறு: மூணாறு அருகே, மாட்டுப்பட்டி அணையில் சுற்றுச்சூழல், வனவிலங்குகளுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், பேட்டரி மூலம் இயங்கும் சுற்றுலாப் படகு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் மின்சாரத்துறைக்கு சொந்தமான அனைத்து படகு மையங்களிலும் பெட்ரோல், டீசல் மூலம் படகுகள் இயக்கப்படுகிறது. இதனால், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், பேட்டரி மூலம் இயங்கும் படகுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, இடுக்கி மாவட்டம், மூணாறில் மின்வாரியத்துறை கீழ் உள்ள மாட்டுப்பட்டி அணையில் மாநிலத்தில் முதன்முதலாக கடந்தாண்டு ஜூலை 25ல் பேட்டரி படகின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதால், பேட்டரி படகுகளை இயக்க மத்திய துறைமுகத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து மாநிலத்திலேயே முதன் முறையாக, மாட்டுப்பட்டி அணையில் ரூ.50 லட்சம் செலவில் 20 இருக்கைகளைக் கொண்ட பேட்டரி படகு கடந்த வாரம் பயன்பாட்டிற்கு வந்தது. இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பேட்டரி படகில் 11 கிலோ வாட் அக்வாமாட் எலக்ட்ரிக் அவுட்போர்டு மற்றும் 28 எச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாதந்தோறும் 6,500 லிட்டர் பெட்ரோலை சேமிக்கலாம். படகுகளில் பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதால், ஆண்டு முழுவதும் வெளியேறும் 15 டன் கார்பன் டை ஆக்சைடை தடுக்கலாம். சோலார் எனர்ஜி மூலம் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மேலும், ஹைடல் சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள அனைத்து படகுகளும், பேட்டரி படகுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இத்தகையை படகுகளை சவாரி செய்யவே சுற்றுலாப் பயணிகள், அதிகம் விரும்புகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Sunaru Dam ,cow dam ,Kerala ,Dinakaran ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை