×

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டெல்லி : பாஜகவின் எச்.ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஈரோடு டவுன் போலீசார், எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் விசாரணையை சந்திக்க எச் ராஜாவிற்கு ஐகோர்ட் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எச்.ராஜா. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எச் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எச் ராஜா தெரிவித்த கருத்துக்கள், எந்த விதத்திலும் பெண்களை கொச்சைப்படுத்தவில்லை. இந்த பதிவு எந்த கலவரத்தையும் மாநிலத்தில் தூண்டவில்லை,”என்ற தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “உங்கள் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது. அரசியலில் இருப்பவர்கள் தாம் என்ன பேச வேண்டும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் பேச வேண்டும். இது போன்று பேசுபவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.எச்.ராஜா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்,”இவ்வாறு தெரிவித்தனர். இதன் மூலம் பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகார் மீதான விசாரணையை எச்.ராஜா எதிர்கொள்வது உறுதி ஆகி உள்ளது.

The post பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த புகாரில் எச்.ராஜா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : H. Supreme Court ,Delhi ,Bajakhavin H. ,Supreme Court ,Raja ,Tamil Nadu ,J. ,Senior Chairman ,H. Raja ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!