×

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

அம்பத்தூர், மே 14: சென்னையில் புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும்.

இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது. இதன்மூலம், கியூஆர் கோடு பயன்படுத்தி அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் இரண்டாம் வாரம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். அதுமட்டுமின்றி உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் இருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்துகளுக்கான ஸ்மார்ட் கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம். நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்க வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டுகளை இப்படிப்பட்ட பேருந்துகளிலும் பயன்படுத்தும் வசதி விரைவில் வர உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பாக தற்போது இது தொடர்பான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை செய்து உள்ளார். இதன் மூலம் சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை விரைவில் அரசு ஏற்படுத்த உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Chennai ,Dinakaran ,
× RELATED யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர...