×

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது: சென்னைஐகோர்ட் கருத்து

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு மே 18ம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை நடைமுறைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வளத்தி காவல் நிலையத்தினர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பு வழக்கறிஞர் பாஸ்கரன், மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டத்துக்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வளத்தி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.

The post தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது: சென்னைஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Adal ,ChennaiCourt ,Chennai ,Chennai High Court ,Adal Song Festival ,Temple Festival ,Maryamman ,Vilupuram District ,Malmalayanur Taluga ,Old Marakkanam Village ,ChennaiiCourt ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி,...