×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, கொடைக்கானல் பகுதியில் வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் பகுதியில் மழை பெய்தால் அருவியில் நீர்வரத்து ஏற்படும்.

விடுமுறை மற்றும் கோடைகாலங்களில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குவிந்து குளித்து மகிழ்வர். இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால், கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என தெரிவித்துள்ளனர். இதனால், கும்பக்கரைக்கு இன்று வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakarai Falls ,Periyakulam ,Kumbakarai ,Western Ghats ,Periyakulam, Theni District ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 2 வது நாளாக தடை..!!