×

என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக 14.05.2024 முதல் 21.05.2024 வரை நடைபெறுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 91.03 சதவீத மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டு பொதுத்தேர்வின் தேர்ச்சியினை காட்டிலும் சதவீதம் அதிகமாகும். பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் (95.15) தமிழகத்தின் சராசரி தேர்ச்சிவிகிதம் 94.56 விட அதிகமாகும்.

இத்துறையின் கீழ் செயல்படும் 26 ஆதிதிராவிடர் நலபள்ளி மாணக்கர்களும், 14 பழங்குடியினர் நலப் பள்ளி மாணக்கர்களும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக. 38 மாவட்டங்களைச் சேர்ந்த 13800 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவிடும் பொருட்டு, இரண்டாம் கட்டமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 14.05.2024 முதல் 21.5.2024 வரை மாவட்ட வாரியாக நடத்தப்படவுள்ளது.

14.05.2024 அன்று சென்னை, நாகப்பட்டினம். பெரம்பலூர், மயிலாடுதுறையிலும் 15.05.2024 அன்று தருமபுரி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களிலும் 16ம் தேதி ஈரோடு, அரியலூர், தென்காசி, திருப்பூர், தஞ்சாவூர் மாவட்டத்திலும் 17ம் தேதி காஞ்சிபுரம், மதுரை, விழுப்புரம், நீலகிரி, சேலத்திலும் 18.05.2024 அன்று தூத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளுர், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களிலும் 20.05.2024 அன்று கரூர், திருப்பத்தூர், விருதுநகர், திருவாரூர், வேலூர், ராமநாதபுரம், தேனி மாவட்டத்திலும் 21ம் தேதி ராணிப்பேட்டை, சிவகங்கை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நடைபெறுகிறது.

பள்ளி இறுதி ஆண்டில் தேந்தெடுத்த பாடங்களுக்கேற்ப உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேந்தெடுக்கும் முறை, விண்ணப்பம் பதிவு செய்வதற்கான உயர்கல்வி நிறுவனங்களின் இணையதள முகவரி, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை, தேவையான சான்றிதழ்கள் குறித்து உரிய விளக்கப்படங்களுடன் பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

உயர்கல்வி குறித்த மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு இத்துறையின் சார்பில் பல்வேறு துறை நிபுணர்களை கொண்ட டெலிகிராம் அலைவரி (https://t.me/+qbZngA9zNH82YTdl) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களையும் மாணவர்கள் தீர்த்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பள்ளி இறுதியாண்டு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த அனைத்து மாணக்கர்களும் கலந்துகொள்ளலாம்.

பங்கேற்க விரும்பும் மாணவர்கள் QR code பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம் என்றும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை QR code பயன்படுத்தி டெலிகிராம் அலைவரிசையில் இணைந்து கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

 

The post என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adhiravidar ,Aadiravidar ,Tribal Welfare Schools ,Dream ,
× RELATED ஆதிதிராவிடர், பழங்குடியின...