×

கோடை விடுமுறையையொட்டி டாப்சிலிப், ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பொள்ளாச்சி : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் மற்றும் ஆழியார் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 6 வனச்சரகங்களில் பொள்ளாச்சி,டாப்சிலிப்,வால்பாறை ஆகிய வனசரகங்களில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

வனத்துறைக்குட்பட்ட டாப்சிலிப் மற்றும் கவியருவிக்கும்,பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் அணை,பூங்கா ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகள் வந்து பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர். இதில், டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி வனத்தின் அழகு மற்றும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், டாப்சிலிப்பில் பயணிகள் தங்கி வனத்தின் அழகையும்,வன விலங்குகளை கண்டு ரசிக்கவும் வனத்துறை சார்பில் அம்புலி,வுட் ஹவுஸ்,சித்தல், டிரீ டாப்,பில்லர் டாப் மற்றும் மூங்கில் குடில் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் விதவிதமான தங்கும் விடுதிகளை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

விடுதிகளைப் பொறுத்து அதற்கு தகுந்தார் போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு டாப்சிலிப்பில் மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.இந்த வருடம்(2024) முன்கூட்டியே டாப்சிலிப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வரத்துவங்கினர்.கோடை வெப்பத்திலும், கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இம்மாத துவக்கத்திலிருந்து,வெளியூர்களிலிருந்து டாப்சிலிப்புக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.அதுபோல்,ஆழியாருக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கியுள்ளனர்.

தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்கிறது. இருப்பினும், அதையும் பொருட்படுத்தாமல் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஆழியார் அணையின் அழகை ரசித்தும், பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்தும் மகிழ்ந்து செல்கின்றனர்.விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

The post கோடை விடுமுறையையொட்டி டாப்சிலிப், ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tapsilip ,Aliyar dams ,Pollachi ,Aliyar Dam Park ,Valparai ,Anaimalai Tiger Reserve ,Aliyar Dam ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி...