×

பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி; தாயும் மகளும் கல்லூரியில் சேர முடிவு: நெமிலி அருகே ருசிகரம்

நெமிலி: நெமிலி அருகே பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற தாயும் மகளும் ஒரே கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (49), கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகவேணி (35). இவர்களது மகள் பத்மலோஷினி (17). இவர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதினார். தாய் நாகவேணி தனித்தேர்வராக தேர்வு எழுதினார். கடந்த 6ம் தேதி வெளியான தேர்வு முடிவில் பத்மலோஷினி 511 மதிப்பெண் பெற்றும், தாய் நாகவேணி 386 மதிப்பெண்கள் பெற்றும் தேர்ச்சி பெற்றனர்.

இதுகுறித்து மாணவி பத்மலோஷினி கூறுகையில், ‘எனது அம்மா 2002ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நான் 11ம் வகுப்பு படிக்கும்போது எனது தாயை தனி தேர்வு மையம் மூலம் பதிவு செய்து.

எனக்கு பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை தாய்க்கு வீட்டில் தினமும் நான் கற்றுக்கொடுத்தேன். கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வு எழுத வைத்தேன். இதில் எனது அம்மா 372 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினோம். இதிலும் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளோம். தொடர்ந்து நாங்கள் இருவரும் கல்லூரியில் சேர உள்ளோம். நான் படிக்கும் கல்லூரியில் எனது தாயையும் சேர்க்க உள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

தாயும் மகளும் ஒன்றாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்ல இருப்பதை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர். நாகவேணியின் மகன் மோகனரங்கன்(15), தற்போது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி; தாயும் மகளும் கல்லூரியில் சேர முடிவு: நெமிலி அருகே ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : Plus 2 ,Nemili ,Sundaramurthy ,Perumpulimbak ,Ranipet district ,Nagaveni ,Padmaloshini… ,Rusikaram ,Dinakaran ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு