×

அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி வேலுமணியா? தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடி பதவி காலி: அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜ ரெடி

புதுக்கோட்டை: தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜ பிளவை ஏற்படுத்தும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈடி எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு ஒரு கட்சியின் தலைவர் என்கின்ற முறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிமை உண்டு. அதனால் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தேர்தல் பணியாற்ற அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடியின் பிரசாரம் ஒன்றே போதும் பாஜ தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும். ஆத்திரத்தோடும் இந்தியா கூட்டணியின் மீது வெறுப்பை உருவாக்குகின்ற வகையிலும் அவர் பேசுகின்ற பேச்சு பாஜ ஆட்சியை இழந்து விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. பாஜ கூட்டணி கட்சியில் தேர்தல் ஆணையமும் ஒன்று. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்.

யூடியூபர் சங்கர் வீட்டில் காவல்துறையினர் சென்றபோது உரிய சாட்சிகளுடன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே தவிர பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் வேறு விதமாக விமர்சனங்களில் இறங்குகின்ற போது அவரது பதவிக்கு ஆபத்து வந்துவிடும். அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. யாராக இருந்தாலும் பல நாள் வாழ வேண்டும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அதனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்லாண்டு காலம் வாழ திமுக மனசாட்சியுடன் எப்போதும் வாழ்த்தும்.

தேர்தலுக்கு பிறகு என்னென்ன வருகிறது என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, எஸ்.பி வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். ஆனால், ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம் பாஜ செய்யும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி வேலுமணியா? தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடி பதவி காலி: அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜ ரெடி appeared first on Dinakaran.

Tags : Red Fort ,SP Velumani ,Edappadi ,BJP ,AIADMK ,Pudukottai ,Edappadi Palaniswami ,Sengottaiyan ,Velumani ,Minister ,Raghupathi ,Tamil Nadu Law Department ,SB Velumani ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...