×

கோடை வெயில் காரணமாக வரத்து குறைவு; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்வு

சென்னை: கோடை வெயில் காரணமாக வரத்து குறைந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கீரை வகைகள், பழங்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அனைத்து காய்கறிகளும் மொத்தமாகவும், சில்லரை விற்பனையிலும் கிடைப்பதால் ஏராளமான பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கோடை வெயில் காரணமாக நேற்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டதால் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ அளவில் பீன்ஸ் ₹50லிருந்து ₹180க்கும், பூண்டு ₹150லிருந்து 350க்கும், எலுமிச்சைபழம் ₹70லிருந்து 190க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெங்காயம் ₹20லிருந்து 30க்கும், நவீன தக்காளி ₹20லிருந்து 40க்கும், பீன்ஸ் ₹50லிருந்து ₹180க்கும் பீட்ரூட் ₹25லிருந்து ₹50க்கும், முள்ளங்கி ₹15லிருந்து ₹30க்கும், சவ்சவ் ₹30லிருந்து ₹50க்கும், முட்டைகோஸ் ₹15லிருந்து ₹30 என அனைத்து காய்கறிகளும் இருமடங்கு விலை உயர்ந்து விற்பனையானது.

இது குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், வரத்து குறைவு மற்றும் வெயிலின் தாக்கத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ், பூண்டு, எலுமிச்சம்பழம் உட்பட அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்து விற்பனையானது. இந்த விலை உயர்வு இம்மாதம் முழுவதும் நீடிக்கும், என்றார்.

The post கோடை வெயில் காரணமாக வரத்து குறைவு; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbed market ,Chennai ,Chennai Coimbed Market ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!