×

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய், பிறவிக் குறைபாடு, தீக்காயம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் உடல் மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்பு தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இன்மை காரணமாக, நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பெரிய அளவிலான உடல்காயங்களும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.ஆனால், இது போன்றவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணம்.

இதனால் பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

முதல்வரின் இந்த அறிவிப்பால் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 மாதத்தில் மட்டும் இதுவரை 100-க்கு மேற்பட்ட இறந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ம் ஆண்டு 178 நபர்களும் 2022ம் ஆண்டு 156 நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மே 9 தேதி வரை 102 நபர்களிடம் இருந்து மொத்தம் 324 முக்கிய உறுப்புகள் மற்றும் 271 திசுக்கள் மீட்டெடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி இரண்டு கை மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

The post தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...