×

4ம் கட்ட மக்களவை தேர்தல்; 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: அகிலேஷ் யாதவ் உள்பட 1,717 வேட்பாளர்கள் போட்டி

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடக்கிறது. இதில், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 88 தொகுதிக்கும் 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், 17.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிக்கும், தெலங்கானாவில் 17 தொகுதிக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. இதன் மூலம் தென் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலத்திலும் இன்றுடன் மக்களவை தேர்தல் நிறைவடைகிறது. இதே போல மத்திய பிரதேசத்தில் இன்று தேர்தல் நடக்கும் 8 தொகுதிகளுடன் அம்மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நிறைவடைகிறது.

இம்மூன்று மாநிலங்களைத் தவிர பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 4, மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, உபியில் 13, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (கன்னோஜ் தொகுதி, உபி), ஒன்றிய அமைச்சர்கள் கிரிராஜ் சிங் (பெகுசராய், பீகார்), நித்யானந்த் ராய் (உஜியார்பூர், பீகார்), காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் (இருவரும் பஹரம்பூர் தொகுதி, மேற்கு வங்கம்), நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான சத்ருகன் சின்கா (அசன்சோல், மேற்கு வங்கம்), ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைசி (ஐதராபாத், தெலங்கானா), திரிணாமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா (கிருஷ்ணாநகர், மேற்கு வங்கம்) மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா (கடப்பா) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.

இவர்களைத் தவிர, 2021 லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உபியின் கேரி தொகுதியில் களமிறங்குகிறார். லக்கிம்பூர் கேரி வன்முறையில் 4 விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற வழக்கில் அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் குற்றவாளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி கேரி தொகுதியில் போட்டியிடுகிறார். உபியின் கன்னோஜ் தொகுதி சமாஜ்வாடியின் கோட்டையாக இருந்தது.
இங்கு 1998 முதல் 2019 வரை தொடர்ந்து 5 முறை சமாஜ்வாடி வெற்றி பெற்றிருந்தது. கடந்த 2014 தேர்தலில் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் வெற்றி பெற்று, கன்னோஜின் முதல் பெண் எம்பி என்ற பெருமையை பெற்றார். அதன் பின் 2019ல் டிம்பிள் யாதவ் பாஜவின் சுப்ரத் பதக்கிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், மீண்டும் கோட்டையை கைப்பற்ற அகிலேஷ் யாதவ் இம்முறை பாஜ வேட்பாளரும் சிட்டிங் எம்பியுமான சுப்ரத் பதக்கை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹூவா மொய்த்ரா மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதனால் 4ம் கட்ட தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தலைவர்களில் ஒருவராக மொய்த்ராவும் உள்ளார். 96 தொகுதிகளில் பாஜ எம்பிக்கள் சுமார் 40 பேர் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே 3 கட்ட தேர்தலில் 283 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்றைய தேர்தலுடன் சேர்த்து 379 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முடிவடையும். அடுத்ததாக வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலும், 25ம் தேதி 6ம் கட்ட தேர்தலும், ஜூன் 1ம் தேதி 7வது மற்றும் இறுதிகட்ட தேர்தலும் நடைபெறும். ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது. ஜெகன் மோகனின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை எதிர்த்து சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரத்தில் ஒய்எஸ்ஆர், தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியினர் பல இடங்களில் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக 26,500 போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, ஒடிசாவில் 21 மக்களவை, 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 4 கட்டமாக இன்று தேர்தல் தொடங்குகிறது. நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதில் நவீன் பட்நாயக் வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வராக தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

The post 4ம் கட்ட மக்களவை தேர்தல்; 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: அகிலேஷ் யாதவ் உள்பட 1,717 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags : phase Lok Sabha election ,Akhilesh Yadav ,New Delhi ,Lok Sabha elections ,Samajwadi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…