×

நாகை-இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் துவக்கம்: இன்று சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் கப்பல் இன்று நாகை செல்கிறது. இதை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடக்கிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து இருந்தது. பல்வேறு காரணங்களால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயங்கிய கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை வைத்தனர். இதன்அடிப்படையில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கிய செரியாபாணி என்ற பெயர் கொண்ட கப்பல் இயற்கை சீற்றத்தை காரணம் காட்டி 20ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து ஒன்றிய அரசு தமிழக அரசுடன் இணைந்து டெண்டர் விடப்பட்டது. இதனால் மீண்டும் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் தயாராகி நேற்று முன்தினம் (10ம் தேதி) மதியம் சென்னை துறைமுகம் வந்தது. அங்குள்ள கப்பல் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு உள்ளிட்ட சில அரசு சார்ந்த பணிகள் நடைபெறுகிறது.

இதனால் சென்னையில் இருந்து நேற்று (11ம் தேதி) மதியம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர வேண்டிய சிவகங்கை கப்பல் இன்று (12ம் தேதி) மதியம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சோதனை ஓட்டமாக காலை 8 மணிக்கு புறப்படும் கப்பல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறை சென்றடையும். அதே போல் இலங்கையில் இருந்து 2 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை நாளை (13ம் தேதி) தொடங்க உள்ளது.

The post நாகை-இலங்கை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் துவக்கம்: இன்று சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,Nagapattinam ,Naga ,Chennai ,Sivakangai ,Burma, Indonesia ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...